ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்!

அறிமுகமான முதல் சீசனிலே ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் 2022 தொடரின் இறுதிப் போட்டி நேற்று (மே 29) இரவு நடைபெற்றது. பிரமாண்ட இறுதிப் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிகழ்த்தப் பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியில் இருந்து ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர்.

16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன், குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் பட்லர் சிறிது அதிரடி காட்ட தொடங்க மறுபக்கம் விக்கெட்டுகள் வீழ்ச்சி தொடர்ந்தது.

அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை தானே பந்துவீசி தானே கேட்ச்சையும் பிடித்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

அதைத் தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

131 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இறுதியில் சஹால் இந்த ஜோடியைப் பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார். இருப்பினும் ஒருமுனையில் கில் நிதானமாக விளையாடி வர, மில்லர் அவருடன் சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்களை சேர்த்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.