ஐபிஎல் 2022: மீண்டும் இதயங்களை வென்ற பெங்களூர்... இறுதி போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான்!

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மே 27) நடைபெற்றது. இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் அடித்த படிதார் - கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டு பிளசிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் படிதார் அற்புதமாக விளையாட மறுமுனையில் மேக்ஸ்வெல் ட்ரென்ட் போல்ட் பந்தில் ஓபே மெக்காயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக ஆடிய படிதார் அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டாகினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு
முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் ஓவரில் பவுண்டரி மழைகளை பொழிந்த இந்த ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது.

ஒருபக்கம் ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பட்லர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பின்னர் சாம்சன் 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் வெளியேறினார்.

தொடர்ந்து படிக்கல் களமிறங்கினார். ஒருமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் அடித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைக்காமலேயே மீண்டும் பெங்களூர் அணி வீடு திரும்பியது.

நாளை (மே 29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.