2022 ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மே 24) இரவு நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் தயாள் பந்து வீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜாஸ் பட்லர் உடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார் சாம்சன். பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சாம்சன் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.
இதனால் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டு இழப்புக்கு 55 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பட்லருடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்த இந்த ஜோடியை கேப்டன் பாண்டியா பிரித்தார். படிக்கல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹெட்மயர் களமிறங்கினார். அதுவரை நிதானமாக ஆடி வந்த பட்லர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கினார். ஜாஸ் பட்லர் 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம் என்ற முனைப்புடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சாஹா இரண்டாவது பந்திலே ட்ரெண்ட் போல்ட் ஓவரில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதன் பிறகு சுப்மன் கில் உடன் மேத்திவ் வேட் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் அடித்த நிலையில் ராஜஸ்தான் வீரர் படிக்கல் அடித்த ஆட்டகாசமான த்ரோவின் மூலம் சுப்மன் கில் ரன் அவுட்டாகி வெளியேறினார்
அவரை தொடர்ந்து மேத்திவ் வேட் 35 ரன்களில் நடையைக்கட்ட குஜராத் அணியின் அதிரடி ஜோடி களத்தில் ஒன்று சேர்ந்தனர். கேப்டன் ஹர்த்திக் பாண்டியா - டேவிட் மில்லர் அதிரடியாகவும் அதே நேரத்தில் பொறுப்பாகவும் விளையாடினர்.
கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் பாண்டியா - டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருக்க இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச முதல் பந்தில் மில்லர் சிக்சர் விளாசினார். அதை தொடர்ந்து இரண்டாவது பந்திலும் மில்லர் சிக்சர் விளாச குஜராத் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்ட மில்லர், குஜராத் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.
மூன்று பந்துகள் மீதம் இருக்க ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (மே 25) வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது.
அதாவது வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் அகமதாபாத்தில் 27ஆம் தேதி நடக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும்.