ஐபிஎல் 15ஆவது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த நிலையில் நேற்று (மே 22) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரியம் கார்க், ரபாடா பந்து வீச்சில் கேப்டன் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவரும் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, சிறப்பாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 43 ரன்களில் ஹர்ப்ரீத் பிரார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பூரன் 5 ரன்களிலும் மார்க்ரம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி 5 ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் - ரொமாரியோ ஷெப்பர்ட் ஜோடி அதிரடி காட்டினர். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் விளையாடினர். பேர்ஸ்டோவ் 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஷாருக்கான் ரன்களிலும் 19 கேப்டன் அகர்வால் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
ஷிகர் தவான் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இன்று (மே 23) ஐபிஎல்லில் எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. நாளை (மே 24) இறுதிகட்ட பிளே ஆப் ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.