2022 ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இன்று (மே 27) மோதுகின்றன.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிச்சுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மே 27) இரவு மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதிச்சுற்றில் குஜராத்திடம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடத்துக்குள் வந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.
2008ஆம் ஆண்டு அறிமுக ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் கைப்பற்றியது. அதன்பிறகு அந்த அணி இறுதிச்சுற்றைகூட எட்டியதில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது.
அதே சமயம் லீக் சுற்று முடிவில் 8 வெற்றி, 6 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி வெளியேற்றுதல் சுற்றில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரஜத் படிதாரின் அட்டகாசமான சதம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அசத்தினார். இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்த தயாராக இருக்கிறது.
பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால், மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோல்வியடைந்துள்ளது. இந்த நீண்ட கால சோகத்தை தணிக்க பெங்களூரு அணிக்கு இது அருமையான சந்தர்ப்பமாகும். இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு முறை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் பெங்களூரு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டன.
ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாக உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் அணியுடன் மே 29 (ஞாயிற்றுக்கிழமை) மோதவுள்ளது.