ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று, ஒவ்வோர் அணியும் தலா 14 போட்டிகளில் விளையாடின.
புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐந்தாவது இடத்தையும் (7 வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் ஆறாவது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழாவது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எட்டாவது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் குறைந்த அளவிலான 8 புள்ளிகள் பெற்று முறையே ஒன்பதாவது, பத்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டன.
இந்த நிலையில் பிளே ஆப் சுற்று இன்று (மே 24) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ - பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.
எலிமினேட்டர் நாளை (மே 25) கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27ஆம் தேதியும், இறுதிப்போட்டி 29ஆம் தேதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா, ராஜஸ்தானா? இரு அணி வீரர்களும் வெற்றிக்காக வெறித்தனமாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.