மகாராஷ்டிராவில் NH-53 இல் 75 கிமீ நீளமுள்ள சாலையை ஐந்து நாட்களில் உருவாக்கி NHAI உலக சாதனை படைத்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) NH-53 நெடுஞ்சாலையில் ஐந்து நாட்களுக்குள் ஒரே பாதையில் 75 கிமீ நீளமுள்ள தொடர்ச்சியான சாலையை அமைத்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவின் அமராவதிக்கும் அகோலாவுக்கும் இடையிலான 75 கிமீ நீளமுள்ள சாலையை 105 மணி 33 நிமிடங்களில் உருவாக்கி NHAI கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமராவதி-அகோலா நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இந்த NH-53 நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைப்பதாக அமைந்துள்ளது.
இதனை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலையின் படத்தையும், கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்,”கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி பொதுப்பணித்துறை ஆணையம் – ASHGHAL (கத்தார்) கின்னஸ் சாதனையை இதற்கு முன்பு பெற்றது. இந்த சாலை அல்-கோர் விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக இருந்தது, மேலும் பணியை முடிக்க 10 நாட்கள் ஆனது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.