தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?- அண்ணாமலை பதில்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா நேற்று முன்தினம் முடிந்தபின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு தங்கினார். அப்போது அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் ஆளுநர் மாளிகை வெளியே நள்ளிரவில் நிருபர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் தமிழக கலாசாரத்தை சரியாக பிரதிபலிக்கும்வகையில் அற்புதமான காட்சியை வடிவமைத்திருந்தார். இதன் மூலம் 5 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கக்கூடிய நமது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் தமிழக அரசு எடுத்துச் சென்றிருக்கிறது. பிரதமரும், முதல்-அமைச்சரும் பேசும்போது, நாட்டையும், கலாசாரத்தையும் முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள். எனவே தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மிக அருமையாக தொடக்கவிழாவை நடத்தி இருக்கிறார்கள் என பாராட்டு தெரிவித்தார்.
 
இந்தியாவை, நம்முடைய கலாசாரத்தை பெருமைப்படுத்தும்விதமாக தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறது. எனவே முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் பா.ஜ.க.வின் தனிப்பட்ட பாராட்டுகள் உண்டு. ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்திருக்கிறார்கள் என்று பாராட்டினால், கூட்டணி என்றெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது. பா.ஜ.க. கொள்கைரீதியான கட்சி. தனது கொள்கையை எப்போதும் மாற்றிக்கொள்ளாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.