பாஜகவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் இணக்கம் காட்டுவது, தமிழக அரசியல் விமர்சகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், கருப்பு சட்டை அணிந்து கொண்டு தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், கருப்புப் பலூன்களையும் பறக்க விட்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்த நிகழ்வுகளை யாராலும் மறக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.
ஆனால், தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, நேற்று தொடங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பாேட்டி தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக கொடுத்த சிறப்பான வரவேற்பை விட, தமிழக அரசு சிறப்பான வரவேற்பை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மேடையில், பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கைகளை குலுக்கிக் கொண்டு தோளில் தட்டிக் கொடுத்த வண்ணம் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், மத்திய அரசுடன், திமுக திடீர் இணக்கம் காட்டுவதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், அதிமுகவை கழற்றி விட்டு, திமுகவுடன், பாஜக கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பலவீனமாகி விட்டது எனக் கூறப்படுகிற நிலையில், தற்போது, கட்சியை கைப்பற்ற, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே முட்டல் மோதல் நிலவி வரும் நிலையில், இனியும், அதிமுகவை நம்பினால் வேலைக்கு ஆகாது என பாஜக மேலிடம் முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே திமுக பக்கம் தங்களது கவனத்தை பாஜக திருப்பி உள்ளது என கூறப்படுகிறது.
ஒருவேளை, 2024 மக்களவைத் தேர்தலில், திமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையில், 10 இலாகாக்களையும் கேட்கவும், திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலையில், திமுகவின் முக்கியபுள்ளி ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு குறித்து கருத்துத் தெரிவித்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர், தமிழகத்திற்கு நல்லது செய்ய வருவதால், பிரதமருக்கு வரவேற்பு அளித்தோம் என தெரிவித்து உள்ளார்.
அப்படி என்றால், "அதிமுக ஆட்சிக் காலத்தின் போது, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு அப்போது திமுக எதிர்ப்புத் தெரிவித்தது ஏன்? அன்றும் தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தானே வந்தார்..? ஆட்சிக்கு வந்த பிறகு திமுக இரட்டை வேடம் வெளிவந்து விட்டது" என, விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.