அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அலுவலக சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த ஜுலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. . இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது.

மேலும், அதிமுக அலுவலக சாவியை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.