கால்பந்தை வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதற்குக் காரணம் இந்த ஜோதிடர்களின் ‘உத்வேகமூட்டல்’ என்று இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அணி நிர்வாகி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ஆசியக் கோப்பை கால்பந்து தொடர்பாக ‘உத்வேகமூட்டுபவர்’ என்ற பெயரில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிறகுதான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று” என்றார்.
அதாவது வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் பயிற்சி, ட்ரெய்னிங் இவையெல்லாம் விட ஜோதிடம் நன்றாக வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனத்திடம் இந்திய கால்பந்தின் ‘ஜாதகம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அளவில் பெரிய கேலியையும் கிண்டலையும் கிளப்பியுள்ளது, முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ், இதன் மூலம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உரித்தாக்கியுள்ளது என்றார்.
“இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல், பல நல்ல கால்பந்து தொடர்கள் முடங்கியதுதான் நடந்தது. இதோடு இப்போது ஜோதிடர்களிடம் இந்திய கால்பந்தை ஒப்படைத்தது இந்தியக் கால்பந்தையே கேலிக்குரியதாக்கும் முயற்சியாகும்” தனுமாய் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இதை விட அவர் கூறிய வேறொரு விமர்சனம் கவனிக்கத்தக்கது, இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான், நிர்வாகிகள் தங்கள் அயல்நாட்டு சொகுசுப் பயணத்துக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என சாடியுள்ளார்.
“இந்திய கால்பந்துக் கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன, அதில் இது ஒன்றாக இருக்கலாம் விரைவில் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்” என்றார் தனுமாய் கோஷ்.
இந்தியக் கால்பந்தில் ஜோசியம் புதிதல்ல, ஒருமுறை டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ‘பாபா’ என்ற ஒருவரை நியமித்தது, போட்டியை வென்ற பிறகு அவரால்தான் வென்றதாக பெருமைப் பட்டுக் கொண்டதும் நடந்திருக்கிறது.
சுனில் சேத்ரி 3 மேட்ச்களில் 4 கோல்கள் அடித்து இந்தியாவின் சிறந்த ஆசியக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியாக மாற்றியது இப்போது ஜோதிடர் ஆசீர்வாதத்தினால் என்று பேசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இந்திய கால்பந்து விளையாட்டு துறையின் ஆர்வலர்கள் கவலை பூண்டுள்ளனர்.